தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்.. மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் எச்சரிக்கை

சென்னை சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களின் மகன்கள் அன்பு மற்றும் யுவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது. ” என் அப்பா மறைவின் போது எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி, ஊடகத்தினருக்கும், காவல்துறையினருக்கும் நன்றி. என் அப்பாவின் ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன் நண்பர்கள் என்று சொல்வேன் இரண்டு நாட்களாக உலகம் முழுவதிலிருந்து இங்கு வந்து நின்றீர்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்களும் அதிகளவில் வந்திருந்தனர் அவர்களுக்கும் அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொரு ஊடகத்திலும் ஒவ்வொரு விதமாக செய்தி வந்தது. எனவே உடனிருந்த நான் விளக்கமளிக்கிறேன். கேளம்பாக்கம் அருகிலுள்ள மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நான் அப்பா உள்ளிட்டவர்கள் 7.30 மணியளவில் சாப்பிட்டு விட்டு சென்றோம். இரவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நள்ளிரவு 2.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் வீட்டிற்கு வரும் வழியில் பேசிக்கொண்டே வந்தோம். வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு தொலைக்காட்சியில் செய்தி பார்த்தோம்.

நான் உறங்கச்சென்ற பின் 10 நிமிடத்தில் அம்மா என்னை அழைத்தார், மூச்சு விட அப்பாவிற்கு சிரமமாக இருப்பதாக சொன்னார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நான் கார் ஓட்டினேன் திடீரென என் மேல் சாய்ந்து விட்டார். என்னால் தொடர்ந்து கார் ஓட்ட இயலவில்லை, பின்பு ஆட்டோ உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருந்தபோதும் நான் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று நினைத்தேன், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றேன். அங்கு பரிசோதித்த மருத்துவர்களும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தர்மம் எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று சொல்வார். நாங்கள் சொல்கிறோம் தர்மம் எங்குள்ளதோ அங்கு எம்.ஜி.ஆர், என் அப்பா, விவேக் ஆகியோர் உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தான் காலை 6மணிக்கு போன் செய்தோம். அப்போது அவரை தொடர்புக்கொள்ள இயலவில்லை, பின்னர் அவர் வருவதாக சொன்னார்கள் நேரில் சந்தித்து எங்களுக்கு ஆறுதல் கூறினார்.எங்கள் அப்பா எங்களிடம் எப்பவும் பொய் சொல்லாதீர்கள். நேர்மையாக இருங்கள் என்றார். குடிப்பேன் என்று அவர் சொன்னாலும் அவர் வெளியிடத்தில் குடித்ததாக யாரும் பார்க்கமுடியாது. அப்பா குடிப்பதை நிறுத்தி விட்டார். அப்பா என்ன செய்தாரோ அதை நாங்களும் செய்வோம். அப்பாவுடைய மொபைல் எண்ணை அனைத்து வைக்கமாட்டோம்.

எப்பொழுதும் நீங்கள் அந்த எண்ணிற்கு எங்களை அழைக்கலாம். எங்கள் அப்பா விட்டு சென்றதை நானும் என் தம்பியும் தொடர்வோம். அவரின் செல்போன் அனைத்து வைக்கப்படவில்லை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவர் செய்த பணிகளை நாங்கள் தொடர்வோம். எங்களால் முடிந்த உதவியை நாங்கள் செய்வோம். தினமும் 4 மணி நேரம் தான் அப்பா தூங்குவார். பிறக்கு என்ன உதவி செய்யலாம் என யோசிப்பார். சில யூடூயூப் சேனல்கள் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதுபோல தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் ” என மயில்சாமியின் மகன்கள் தெரிவித்தனர்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!