தலைக்கூத்தல் – விமர்சனம்

தனது மனைவி வசுந்தரா, மகள் மற்றும் மரண படுக்கையில் இருக்கும் வயதான அப்பாவுடன் வாழ்ந்து வருகிறார் சமுத்திரக்கனி. தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வரும் சமுத்திரக்கனியின் வருமானத்தையும் அவர் மனைவியின் வருமானத்தையும் வைத்து தான் குடும்பத்தை வழிநடத்தும் சூழ்நிலையில் இருக்கிறது. படுத்த படுக்கையாக இருக்கும் சமுத்திரக்கனியின் தந்தை எல்லோருக்கும் பாரமாக இருப்பதால், அந்த கிராமத்தில் வயதானவர்களை தலைக்கூத்தல் முறையில் கொலை செய்வதுபோல் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்ல மனைவி வசுந்தரா மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள்.

  ஆனால் தனது தந்தையை இப்படி கொலை செய்வதற்கு சம்மதிக்க மறுக்கிறார் சமுத்திரக்கனி. படுக்கையில் இருக்கும் அப்பா தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து அந்த நினைவுகளுடன், தற்போது படுக்கையில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தந்தைக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.   ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா, கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் சண்டை போடுகிறார். சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? உயிர் ஊசலாடும் சமுத்திரக்கனியின் அப்பாவின் உயிர் தப்பித்ததா? தனது தந்தையை சமுத்திரக்கனியால் காப்பாற்ற முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சமுத்திரக்கனி கைத்தட்டல் பெறுகிறார். யதார்த்தத்தை நடிப்பின் மூலம் கண்முன் நிறுத்தி வசுந்தரா பாராட்டை பெறுகிறார். கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டை, கோபம், அன்பு என அனைத்தையும் வசுந்தரா அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.   சமுத்திரக்கனி தந்தையின் இளைய வயது பிளாஷ்பேக் கதாப்பாத்திரமாக நடித்திருக்கும் கதிர் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். கதிரின் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார் கலைச் செல்வன். மேலும் படத்தில் பிற கதாப்பாத்திரங்களில் வரும் ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் வேடங்கள் கவனிக்க வைக்கிறது.   கிராமத்தில் நடக்கும் தலைக்கூத்தல் விஷயங்களை பதிவு செய்ய முயற்சித்திருப்பதற்காக இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள். அடிதடி, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார்.

இருந்தும் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். கதிர் காதலிப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யாதது போல் தோன்றுகிறது. சில இடங்களில் கதை ஒட்டாமல் நிற்பது போன்று உள்ளது.   படத்தின் உணர்வுகளை இசையின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன். கிராமத்து அழகை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மார்டின் டான் ராஜ். மொத்தத்தில் தலைக்கூத்தல் – உணர்வு


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!