கெட்டது பேசினால் பணம் வருகிறது.. விஜய் சேதுபதி வேதனை..

சென்னை 20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது நேற்று நிறைவு பெற்றது. இதில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்து போய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. அந்த அனுபவத்தின் வழியாக ஒரு இயக்குனர் தன்னுடைய பார்வையை சொல்கிறார். முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

எந்தவொரு படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால் வியூஸ் கூடுகிறது அதனால் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. உங்களுடைய பார்வையில் உங்களுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி ஒரு திரைப்படத்தை பாருங்கள். நடிகர் பூ ராமுவுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதி விருதுக்கான பரிசுத்தொகையை விழாக்குழுவிற்கு நன்கொடையாக வழங்கினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!