ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது.. நடிகர் கண்ணா ரவி நெகிழ்ச்சி

தமிழின் முன்னணி எழுத்தாளரும் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றிப்படங்களின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ எனும் சிறுகதையை தழுவி ‘ரத்தசாட்சி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்க, ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பிரபலங்கள், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் கண்ணா ரவி கூறியதாவது, இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயமோகன் சாரின் இந்தக்கதை அட்டகாசமானது. அதை இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படத்தை எடுக்க ஒப்புகொண்ட அல்லு அரவிந்த் சாருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும் என்றார்.

இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது, ஜெயமோகன் சார் இந்த கதையை கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரை தாண்டி எனக்கு இந்த கதையை கொடுத்தார். பல தயாரிப்பாளர்களை தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்த் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது. கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.







  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!