படப்பிடிப்பை நிறைவு செய்த ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனிடையே மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

ஹிப்ஹாப் ஆதி தற்போது மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி காமெடி ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். வீரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களை தயாரித்த ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்க இணை தயாரிப்பை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் செய்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக் டி மேனன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ஜி.கே.பிரசன்னா கவனிக்க ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார்.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!