புது ஜானர் கதைகளால் எனக்கு ரசிகர்கள் இல்லை – இயக்குனர் ஜெய தீர்த்தா

கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பனாரஸ்’. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.

இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் இயக்குனர் ஜெய தீர்த்தா பேசியதாவது “இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இது ஒரு யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்’ என்றார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!