டூடி – விமர்சனம்

கதாநாயகன் ஒரு ஜாலியான வாழ்க்கையை வாழக்கூடிய இளைஞன். ஒரு மியூசிக் பேண்டு வைத்து அதில் கிட்டார் வாசிப்பாளராக இருந்து, பார்க்கின்ற பெண்களை தன் திறமையின் மூலம் வசிகரப்படுத்திக்கொள்ள கூடியவராக இருக்கிறார். காதல் மீது துளியும் நம்பிக்கை இல்லாமல் வாழ்கையை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு திருமணத்திற்கு போகக்கூடிய கட்டாயம் அவருக்கு ஏற்படுகிறது.

அங்கு எதிர்பாராத விதமாக கதாநாயகியை சந்திக்க, அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் கதாநாயகனை வெறுத்தாலும் பழக பழக அவரின் நேர்மையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மையும் அவருக்கு பிடித்து போகிறது. பெங்களூருவில் இரண்டு நாட்கள் தங்கி இருவரும் நண்பர்களாக ஊர்சுற்றி வருகிறார்கள். கதாநாயகியுடன் பழகும் நோக்கத்தை வெளிப்படையாக சொல்ல, அவரும் எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நண்பராகவே பழகுகிறார்.

பிறகு சென்னைக்கு திரும்ப வேண்டிய சூழல் வரும்பொழுது திடிரென்று தன்னுடைய காதலை கதாநாயகி வெளிப்படுத்தி விடுகிறார். இதற்குமுன்பு வேரொருவருடன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று கதாநாயகி சொல்ல அதிர்ந்து போகிறார் கதாநாயகன். இறுதியில் கதாநாயகி விரும்பியவருடன் திருமணம் செய்துக் கொள்கிறாரா? அல்லது நிச்சயிக்கப்பட்டவருடன் தன்னுடைய வாழ்க்கையை தொடங்குகிறாரா? என்பதே படத்தின் மீதிகதை.

கதைக்கு தேவையான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார். புதுமுக நடிகர் என்ற உணர்வை ஏற்படுத்தாமல் நடித்திருக்கிறார் கார்த்திக் மதுசூதன். பெண்களை தன்வசப்படுத்தும் இடங்களில் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிரிதா சிவதாஸ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். காதலுக்காக ஏங்கும் இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்திய சினிமாக்களில் இதுவரை சில இடங்களில் தென்ப்பட்ட கதையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர்கள் சாம்.ஆர்.டி.எக்ஸ் மற்றும் கார்த்திக் மதுசூதன். ஒரு சிறிய கதையை எடுத்துக் கொண்டு அதனை நீண்ட திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். திரைக்கதையை சுவாரசியப்படுத்தி இருந்தால் சற்று விறுவிறுப்பு ஏற்பட்டு இருந்திருக்கும். புதுமுக நடிகர்களாக படம் முழுக்க இருப்பதால் படத்தின் கதாப்பாத்திரங்களை புரிந்துக் கொள்வது பார்வையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.

கதைக்கு தேவையான எதார்த்த காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதன் சுந்தர்ராஜ். கதாநாயகன் கிட்டார் கலைஞன் என்பதால் பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம், இருந்தும் இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் அவரின் பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில் டூடி – சுவாரஸ்யம் குறைவு





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!