கல்லி பாய் படம் ஆஸ்கர் விருதை வெல்லும்- அலியாபட் நம்பிக்கை

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்லி பாய் என்கிற இந்தி படம் விருதை வெல்லும் என அலியாபட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘கல்லிபாய்’ என்கிற இந்தி படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதில் ரன்வீர் சிங் நாயகனாகவும், அலியா பட் நாயகியாகவும் நடித்துள்ளனர். சாயா அக்தர் இயக்கி உள்ளார். தந்தை மற்றும் சித்தியால் உதாசினபடுத்தப்பட்டு பாசத்துக்காக ஏங்குவதுபோல் ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவரது தோழியாக அலியா பட் வருகிறார்.

வீதிகளில் பாடல்களை பாடி திரியும் இளைஞன் எப்படி பெயரும் புகழும் அடைகிறான் என்பது கதை. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இதுவரை ரூ.238 கோடி வசூல் ஈட்டி உள்ளது. கல்லிபாய் ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்வதற்கு அலியா பட் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:- “கல்லிபாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக உள்ளது. ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படும் எனது முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். எனது உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

கல்லி பாய் படக்குழுவினருக்கு இது பெருமையான விஷயம். ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரையில் 5 படங்கள் இடம்பெறும் அதில் ஒரு படமாக கல்லிபாய் இருக்கும். ஆஸ்கர் விருதை கல்லிபாய் வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

இவ்வாறு அலியாபட் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!