மார்க் போட வராதீங்க – நடிகர் கார்த்தி வேண்டுகோள்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், த்ரிஷா, இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை படித்த ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி அளிக்குமா? என்று கார்த்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, “நடிக்கும் போது தான் நான் இந்த புத்தகத்தை படித்தேன். படப்பிடிப்பின் போது ஒவ்வொரு கதாபாத்திரங்களை பார்க்கும் போதும் மிகவும் அழகாக இருந்தது. கதையில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியை பார்க்கும் போதும் எனக்கு ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. நீங்களும் அப்படி தான் படத்தை பார்க்கப் போகிறீர்கள். அதனால் எப்படி பண்ணியிருப்பார் என்று மார்க் போட வராதீங்க. இது இந்த தலைமுறைக்கு கிடைத்த அனுபவம் . இது 60 வருட கனவு இதை அனுபவியுங்கள்” என்று பேசினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!