தேஜாவு – விமர்சனம்

எழுத்தாளர் அச்யுத் குமார் எழுதும் கதை நிஜத்தில் அப்படியே நடக்கிறது. அவரது எழுத்துகள் சுற்றியிருப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவர் எழுதும் கதையில் போலீஸ் அதிகாரியான மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.

இது அப்படியே நிஜத்தில் நடக்க என்ன செய்துவதென்று தெரியாமல் இருக்கும் மதுபாலா, ரகசியமாக விசாரிக்க மற்றொரு போலீஸ் அதிகாரியான அருள்நிதியிடம் ஒப்படைக்கிறார். தீவிர விசாரணையில் இறங்கும் அருள்நிதிக்கு திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. இறுதியில் மதுபாலாவின் மகள் ஸ்ம்ருதி வெங்கட் எதற்காக கடத்தப்பட்டார்? யாரால் கடத்தப்பட்டார்? எழுத்தாளர் அச்யுத் குமார் எழுதுவது எப்படி நிஜத்தில் நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி, வழக்கம் போல் திரில்லர் கதைக்களத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. அலட்டல் இல்லாத நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் மதுபாலா, நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதையாசிரியராக வரும் நடிகர் அச்யுத் குமார் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.  பூஜாவாக நடித்துள்ள நடிகை ஸ்ம்ருதி வெங்கட் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறார் காளி வெங்கட்.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். குழப்பம் இல்லாத திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களை வியப்படைய வைத்திருக்கிறார்.

அறிமுக படத்திலேயே சிறந்த முயற்சியை கையாண்ட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுக்கு பாராட்டுகள். லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முத்தையாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் ‘தேஜாவு’ விறுவிறுப்பு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!