நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். நயன்தாராவின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நயன்தாரா திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெற்றோர் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. அப்போது ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருமணத்தை படம்பிடித்து நெட்பிளிக்ஸ் இரு பகுதிகளாக ஒளிபரப்ப 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.


நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இந்த நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு படம் பிடிக்கும் பொறுப்பை கவுதம் மேனன் ஏற்றுக்கொண்டார். இன்று அதிகாலை முதலே திருமணம் நடைபெறும் வடநெம்மேலி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தனியார் ஓட்டலை ஆக்ரமித்திருந்தனர். காலை 8.45 மணி முதல் திருமண சடங்குகள் நடக்கத் தொடங்கியது.

விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேஷ்டி அணிந்திருந்தார். நயன்தாரா பட்டுச்சேசலை அணிந்து காட்சியளித்தார். 10.25 மணியளவில் நயன்தாரா கழுத்தில் இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். திருமண நாளான இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது. காலை 9 மணியிலிருந்து திரையுலகினர் வரத்தொடங்கினர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் சேதுபதி சரத்குமார், கார்த்தி, ராதிகா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், எடிட்டர் மோகன், மணிரத்னம், சுஹாசினி, இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், அட்லி, எஸ்.ஜே. சூர்யா, ஏ.எல்.விஜய், போனி கபூர், கலா மாஸ்டர், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் திரை உலக பிரமுகர்கள், குடும்பத்துடன் கலந்து மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் கவுதம் மேனனிடம் தான் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவரே இந்த திருமணத்தை படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!