நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியது

தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு, நடிகை ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் ஆதாரங்கள் சிக்கியுள்ளது.

கேரளாவில் மலையாள சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் விஜய்பாபு. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் விஜய்பாபு மலையாள இளம் நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த நடிகை கொச்சி தெற்கு போலீசில் நடிகர் விஜய்பாபு மீது புகார் கொடுத்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்ணுரிமை இயக்கத்தினர் குற்றம்சாட்டினர். சினிமாவில் பெண்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து கொச்சி போலீசார், இந்த புகார் தொடர்பாக நடிகர் விஜய்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நடிகையை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட விடுதி, விஜய்பாபு தங்கியிருந்த பிளாட்டுக்கும் சென்று சோதனை நடத்தினர்.

போலீசாரின் விசாரணை தீவிரமடைந்ததை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு கேரளாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டார். அதில் நடிகையின் பெயரை வெளியிட்டதோடு, அவர் வேண்டுமென்றே தன்மீது புகார் கூறுவதாக தெரிவித்தார்.


பாலியல் புகார் கூறியவரின் பெயரை வெளியிட்டதால் போலீசார் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜூ கூறியதாவது
, நடிகர் விஜய்பாபு மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது வீடு மற்றும் அவர் தங்கியிருந்த இடங்களில் சோதனை நடத்தி உள்ளோம். இதில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர் துபாய் நாட்டில் இருப்பதாக தெரிகிறது. எனவே அவரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசு வழங்கி உள்ளோம். அவர் வெளிநாட்டில் இருந்து இந்தியா வராமல் இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விஜய்பாபுவை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடவும் கேரள போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தன்மீதான பிடி இறுகுவதை தொடர்ந்து நடிகர் விஜய்பாபு கோர்ட்டில் முன்ஜாமீன் பெறவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!