இளையராஜா படத்திற்கு தடை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

ளையராஜா இசையமைத்துள்ள படத்தை தணிக்கை குழு தடை செய்துள்ள விவகாரம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

’போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கிய இயக்குனர் கு.கணேசன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’காதல் செய்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா இளையராஜாவின் ஸ்டுடியோவில் நடைபெற்றது. 


இந்த நிலையில் காதல் செய் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு தடை விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி இயக்குனர் கு.கணேசன் கூறியதாவது, ’காதல் செய்’ என்ற காதல் படத்தை இயக்கியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க காதல் படம். ஏற்கனவே நான் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கியிருந்தேன். இது இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இந்தியாவில் எங்குமே வெளியிடக்கூடாது என்று தடை விதித்தனர். இதேபோல 18.5.2009 என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்திருந்தேன். அதற்கும் சிக்கல் கொடுத்தார்கள். நான் இவர்கள் மீது புகார் அளித்து அனுமதி பெற்றேன். 

அந்தப்படத்தைப் பார்த்த அதே குழுவினர்தான் இப்போது காதல் செய் படத்தையும் பார்த்தனர். போர்க்களத்தில் பூ பட நேரத்தில் இவர்கள் என்னை நடத்திய விதம் குறித்தும், அத்து மீறல்கள் குறித்தும் புகார் கடிதமாக மும்பையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு எழுதியிருந்தேன். இதை மனதில் வைத்துக் கொண்டு நான் எடுத்த காதல் செய் படத்தையும் வெளியிடக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்கள். இது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. நான் எதிர்பார்த்ததுதான் இவர்களை நான் சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் கு.கணேசன்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!