அமீருடன் இணைந்த வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் அமீர் மீண்டும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் பயணித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பல பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், “எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!