ராஜவம்சம் – விமர்சனம்

நடிகர் சசிகுமார்
நடிகை நிக்கி கல்ராணி
இயக்குனர் கதிர் வேலு
இசை சாம் சி.எஸ்.
ஓளிப்பதிவு சித்தார்த்

கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணியில் பிறந்த சசிகுமார், சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கிறார். இவருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. தனது கனவு ப்ராஜக்ட்டாக நினைத்து மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இன்னொரு புறம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமணமா, ப்ராஜக்டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இறுதியில் சசிகுமார் எடுத்த முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.

யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
மொத்தத்தில் ‘ராஜவம்சம்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!