19 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்த ஏ.ஆர்.ரகுமான்

தமிழில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கைவசம் பொன்னியின் செல்வன், இரவின் நிழல், கோப்ரா, அயலான் போன்ற படங்கள் உள்ளன.

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவர் கடைசியாக இயக்கிய தமிழ் படம் ‘காதல் வைரஸ்’. 2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியை தழுவியது.

இதையடுத்து தமிழில் கடந்த 19 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் கதிர், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், காதல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக இயக்குனர் கதிர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’, ‘காதல் வைரஸ்’ ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!