கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்-நடிகைகள் வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். இந்த நிலையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் தடவையாக இந்த படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையோடு படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர். படப்பிடிப்பில் கொரோனா பரவியது இதர படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர் நடிகைகளுக்கு பீதியை கிளப்பி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!