பொகரு பட விவகாரம் – மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா

பொகரு பட விவகாரத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்குவதாக கூறி பிரபல நடிகர் துருவ சர்ஜா பிராமணர்களிடம் மன்னிப்பு கோரினார்.

துருவ சர்ஜா-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கன்னடத்தில் பொகரு திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தினர், பெங்களூருவில் உள்ள கன்னட திரைப்பட வர்த்தக சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொகரு படத்தில் இருந்து பிராமணர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் நந்தகிஷோர் அறிவித்தார். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பும் கோரினார்.

ஆனால் துருவ சர்ஜா இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் துருவ சர்ஜாவும் தனது மவுனத்தை கலைத்து உள்ளார். பொகரு பட விவகாரம் குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில் எங்கள் முழு குடும்பமும் அனுமன் பக்தர்கள். அனுமன் ஆசிர்வாதத்தால் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நாங்கள் இந்து கடவுள்களை மதிக்கிறோம். பொகரு படத்தின் மூலம் பிராமணர்களுக்கு ஏற்பட்ட வலிக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த படத்தின் பிராமணர்களை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!