ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன்.. செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.

கடந்த 23 ஆண்டுகளாக இயக்குநராக தனி அடையாளம் படைத்துவிட்ட செல்வராகவன், தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காகிதம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து செல்வராகவனுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.

சாணிக் காகிதம் படத்தில் இன்று முதல் நடிப்பதை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன், 23 ஆண்டுகளாக திரைப்பட உருவாக்கத்தில்… இன்று முதல் நடிகராகவும்… என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன், அவர்கள் தான் என்னை உருவாக்கியவர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!