திரையரங்குகளில் 100 சதவீத அனுமதிக்கு எதிர்ப்பு – ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், இதை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்து வந்தன.

தமிழக அரசின் அரசாணையை கண்டித்து மத்திய அரசு நேற்று கடிதம் எழுதியது. அதில் “50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் வகையிலான உத்தரவை தமிழக அரசு விரைவில் பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்.

100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை. எனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!