நயன்தாரா – விக்னேஷ் சிவனின் படம்…. சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வானது

நடிகை நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ள கூழாங்கல் என்ற படம் சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை தயாரிக்கிறார். இந்த நிலையில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் என்ற இன்னொரு படத்தையும் நயன்தாரா தயாரித்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளும் நாளாக இறுதிகட்ட பணிகளில் இருந்த கூழாங்கல் எனும் திரைப்படத்தை பார்த்தபோது தோன்றியது. கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.

இத்திரைப்படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த திரை அனுபவத்தை நம் மக்கள் அனைவருக்கும் வழங்குவது மட்டுமல்லாது சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இத்திரைப்படத்தின் முழு தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், கூழாங்கல் படம் நெதர்லாந்தில் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், போட்டி பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதேபோல் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள கடைசி விவசாயி படமும் திரையிட தேர்வாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!