மலையாள சினிமா பட இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்

மலையாள சினிமா பட இயக்குனர் ஷாநவாஸ் கோவை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு வயது 37.

மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ் (வயது 37). இவரது சொந்த ஊர் நரணிபுலா. கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக கரி என்ற மலையாள படத்தை இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடாவிட்டாலும் சினிமா விமர்சகர்களின் ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து பிரபல நடிகர் ஜெயசூர்யாவை கதாநாயகனாக வைத்து “சூபியும் சுஜாதாவும்” என்ற பெயரில் ஒரு மலையாள படத்தை இவர் இயக்கினார். இந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டு சூப்பர் ஹிட்டானது.

இதன்பின், இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்திற்காக கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஷாநவாஸின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!