சித்ரா லட்சுமணன் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் கமல்ஹாசன்

சித்ரா லட்சுமணன் எழுதிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் பாகம் என்ற புத்தகத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும் திரைக் கலைஞர்கள் வாழ்க்கையிலே நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து “80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்” என்ற பெயரிலே ஒரு புத்தகத்தை எழுதிய கதாசிரியரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், அதைத்தொடர்ந்து திரையுலகில் தனக்கேற்பட்ட அனுபவங்களை “என்னவென்று சொல்வேன் “என்ற பெயரில் எழுதினார்.

இப்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ முதல் பாகம் என்ற பெயரிலே தன்னுடைய மூன்றாவது புத்தகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். சினிமா உலகில் நடந்த பல சுவையான சம்பவங்களைப் பற்றி மூன்றாண்டு காலம் தொடர்ந்து மாலைமலர் நாளிதழில் ஒவ்வொரு வாரமும் சித்ரா லட்சுமணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம்.

ஜீரோ டிகிரி பப்ளிகேஷன் சார்பில் ராம்ஜி – காயத்ரி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் நெஞ்சம் மறப்பதில்லை புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்

அப்போது “உங்களுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதுங்கள் என்று எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்கு நான் சொன்னேன். இப்பொழுது தான் எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்” என்று சித்ரா லட்சுமணனிடம் சிரித்தபடியே குறிப்பிட்டார் கமல்ஹாசன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!