எனக்குள் இருந்த கலைஞனை கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி – ஜெய்

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் ஜெய், எனக்குள் இருந்த கலைஞனை கொண்டுவந்த ஊரடங்குக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

சிம்பு நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்துக்கு முன்பாக, ஜெய் நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார் சுசீந்திரன். ஷிவ ஷிவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீனாட்சி நாயகியாக நடித்துள்ளார். சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அர்ஜெய் ப்ரின்ஸ், அருள்தாஸ், இயக்குநர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ஜெய். மேலும், இந்தப் படத்துக்காகத் தனது உடலமைப்பையும் மாற்றி நடித்துள்ளார். இது தொடர்பாக ஜெய் கூறியிருப்பதாவது:

“கமல் சார் ‘மருதநாயகம்’ படத்துக்காக உடலை மாற்றியதுபோல நான் என் உடலமைப்பை மாற்றவில்லை. நான் செய்ததெல்லாம் ஒல்லியாகத் தெரிய, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினேன். முதல் முறையாக திரையில் வேட்டி கட்டியதும் இந்தப் படத்துக்காகத்தான். நன்றாக இருந்தது. எனது சிறு வயதில் பல நாட்களை நான் ஒலிப்பதிவுக் கூடத்தில் செலவிட்டிருக்கிறேன்.

‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ ஒலிப்பதிவின்போது நான் அங்கு இருந்திருக்கிறேன். நடிக்க வரவில்லையென்றால் இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவு. ஊரடங்குக்கு நன்றி. எனக்குள் இருந்த இசைக் கலைஞனை அது வெளிக்கொண்டுவிட்டது”. இவ்வாறு ஜெய் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!