விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 12-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது விவசாயிகள், இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களை தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கான நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!