என்னை பிடிக்காதவர்கள் செய்த வேலை இது… ராஜ்கிரண் கோபம்

தமிழ் சினிமாவில் குணச்சித்ர நடிகராக இருக்கும் ராஜ்கிரண், என்னை பிடிக்காதவர்கள் செய்த வேலை இது என்று கோபமாக பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக இருப்பவர், ராஜ்கிரண். பிரபல கதாநாயகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகிறார். இவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி விசாரிக்க அவரை, ‘செல்போன்’ மூலம் தொடர்பு கொண்டபோது, அவரே பேசினார். அவர் கூறியதாவது:

“என்னைப் பற்றி அடிக்கடி இதுபோன்ற வதந்தி வந்து கொண்டிருக்கிறது. எனக்கு வேண்டாதவர்கள் செய்யும் வேலை, இது. என்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

நான் நன்றாக இருக்கிறேன். நல்ல உடல்நலத்துடன் என் வேலைகளை செய்து வருகிறேன். என் மீது பாசம் கொண்ட ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

நான் இப்போது, ‘குபேரன்’ என்ற படத்தை வாங்கி, ‘ரிலீஸ்’ செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்த படத்தில் நானும், மம்முட்டியும் இணைந்து நடித்து இருக்கிறோம். அஜய் வாசுதேவ் டைரக்டு செய்து இருக்கிறார். தரமான கதையம்சம் கொண்ட படம். என் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.”

இவ்வாறு ராஜ்கிரண் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!