மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்

சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர் கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது. பின்னர் பொது மக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார் காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்ததாக தெரிவித்தார்.

மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என விளக்கமளித்தார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!