மிரட்டல் நடிகையை தாக்கிய கொரோனா

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மிரட்டல் பட நடிகை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தமிழில் வினய், சந்தானத்துடன் ‘மிரட்டல்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதேபோல் விமல் ஆஸ்னா ஜவேரி நடிப்பில் திரைக்கு வந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஷ்ரேயா நடிக்கும் ‘சண்டக்காரி’, அட்டகத்தி தினேஷ், தீப்தி நடிக்கும் ‘நானும் சிங்கிள்தான்’ போன்ற தமிழ் படங்களையும் தயாரித்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஷர்மிளா மந்த்ரே தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கொரோனா பாசிடிவ் வந்துள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நான் டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!