பாடும் நிலா எஸ்.பி.பி. நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை – ஒன்றிணையும் பிரபலங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி. நலம்பெற வேண்டி திரைப்பிரபலங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய உள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து பிரபலங்கள் பலர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை காணலாம்.

நடிகர் பார்த்திபன்

தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு. அப்படி எஸ்.பி.பி.யின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள் தான் நாம் அனைவரும். நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைகளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் திரு எஸ்.பி.பி.யின் இளமை ததும்பும் பாடல்களே! காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட, எஸ்.பி.பி.யின் குரல் பத சதவிகிதம் கூடுதலே.

பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால், இன்று மாலை 6 மணிக்கு, அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி… இசையுலகின் பெரும்புள்ளி நோக்கி… அவர் மீண்டு வந்து, நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த, நம் இதயங்குவித்து பிரார்த்தனை செய்வோம்.

தயாரிப்பாளர் தாணு

வானுதிர்த்த கதிராக நெல்லூரில் வந்துதிர்த்த இசையே குழல் இனிது யாழ் இனிதா? என்றால் நின் குரலே இனிதென்பேன். முக்கனி சாறெடுத்து கொம்புத் தேனில் முகிழ்த்தெடுத்த அருஞ்சுவைக்கு மேலானது நின் குரலே சுவையென்பேன். அங்கிங்கெனாதபடி எங்கும் நின் குரல் கேட்க எட்டுத்திக்கும் எதிரொலிக்க எழுந்து வா! பாலு விரைந்து வா.

இன்னிசை பண்ணிசை நல்லிசை அழைக்கிறது எழுந்து வா! பாலு விரைந்து வா தேனிசைத் தென்றலும் ஏழிசை சுரங்களும் நின் வரவுக்காக காத்திருக்க எழுந்து வா! பாலு விரைந்து வா. ஆம் பாரதிராஜா வேண்டியபடி அகிலம் ஆண்டவனை பிரார்த்திக்க நீ. வருவாய் திருவாய் மலர்வாய்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!