பிரபாஸின் அடுத்த பிரம்மாண்டம்…. 3டி படத்தில் நடிக்கிறார்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது பிரபாஸின் 20-வது படத்தை, ‘சாஹோ’ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ராதே ஷ்யாம் என பெயரிட்டுள்ளனர். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா.

இதைத் தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபாஸின் 22-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக பிரபாஸ் அறிவித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாக உள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் உருவாக உள்ளது. 2022-ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!