சுஷாந்த் வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக முகாமுக்கு அனுப்பவில்லை – மும்பை மேயர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரியை வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பவில்லை என மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம்தேதி மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த தற்கொலை தொடர்பாக மும்பை, பாட்னா என இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்தின் காதலி உள்பட பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை
தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார்.

இதையடுத்து, வழக்குதொடர்பான விசாரணைக்காக பாட்னா (சென்ட்ரல்) எஸ்.பி. வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் மும்பை வந்தடைந்தது. இவர்கள் சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணையை உடனடியாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணைக்காக பீகார் மாநிலத்தில் இருந்து மும்பை வந்த பாட்னா எஸ்.பி. வினேய் திவாரியை பிரிஹான் மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், பாட்னா எஸ்.பி. வினேய் திவாரி தனிமைப்படுத்தப்பட்டது தொடர்பாக மும்பை மேயர் கிஷோரி பெட்னிகர் விளக்கம் அளித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துக்கொண்டுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.

யாரையும் எதற்காகவும் கட்டாயப்படுத்தவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களும், கொரோனா சந்தேக நபர்களும் ஹோட்டல்கள் அல்லது வீட்டுத்தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர். அனைத்து வழிகாட்டு நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது. இது ஒன்றும் கட்டாயப்படுத்தல் என நான் நினைக்கவில்லை என மேயர் கிஷோரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுஷாந்த் தற்கொலை வழக்கில் பீஹார் மற்றும் மகாராஷ்டிரா போலீஸ் இடையே உரலசல்கள் ஏற்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!