இந்த இளம் நடிகரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் – சூர்யா, ஜோதிகா

இளம் நடிகர் ஒருவரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என சூர்யாவும், ஜோதிகாவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

விக்கி டோனர் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானவர் ஆயுஷ்மான் குரானா. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தேசிய விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் நடித்த படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுகின்றன.

அந்தவகையில் இவரின் விக்கி டோனர் படத்தை தமிழில் தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். அதேபோல் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த அந்தாதூன் படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்நிலையில், பொன்மகள் வந்தாள் படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் ஆயுஷ்மான் குரானாவின் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவோம் என தெரிவித்தனர். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் கூறினர். இதற்கு ஆயுஷ்மான் குரானா, ‘சூர்யா, ஜோதிகா உங்களின் அன்புக்கு மிக்க நன்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!