அந்த தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது – வெங்கடேஷ்

கொரோனா பாதிப்பு மற்றும் அதை பற்றி வரும் தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது என்று தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மேலும் இரண்டு புலிகளுக்கும், மூன்று சிங்கங்களுக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா பரவுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்திகள் பரவியதால் பலர் தங்கள் வீடுகளில் இருந்து நாய், பூனைகளை வெளியே விரட்டுவதாக தகவல் பரவியது. இதனை விலங்குகள் ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். பிராணிகள் மூலம் கொரோனா பரவாது என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் கூறியிருப்பதாவது:-

‘மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் இது மோசமான காலம் ஆகும். வீடுகளில் வளர்க்கும் பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று பயந்து, அவற்றை மக்கள் கைவிடுவதாக வெளியாகும் தகவல்கள் இதயத்தையே நொறுங்க வைக்கிறது. பிராணிகள் மூலம் வைரஸ் பரவாது என்பதை நிரூபிக்கும் தகவல்கள் வெளியான பிறகும் இவை நடக்கின்றன. மனித நேயத்தை இழக்க வேண்டாம். விலங்குகளையும் அன்பாக பார்த்துக்கொள்வோம்’

இவ்வாறு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!