குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறங்க – முதல்வரிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்

குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்குமாறு பிரபல இயக்குனர் ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடி உள்ளனர். இதனால் மதுவுக்கு அடிமையாகி இருக்கும் குடிகாரர்கள் அல்லாடுகிறார்கள். சில இடங்களில் கள்ளச்சாராய வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. போதைக்காக கைகழுவும் சானிடைசர்கள் மற்றும் திரவங்களை குடிக்கும் சம்பவங்களும், இதனால் உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. எனவே குடிகாரர்கள் பிரச்சினையை மனதில் கொண்டு வீட்டுக்கு வீடு மது விற்க மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவும் தனது டுவிட்டர் பக்கத்தில், “மது கிடைக்காமல் தலைமுடியை பிய்த்து, பைத்தியமாகி மனைவிமார்களை அடித்து துன்புறுத்தும் குடிகாரர்களுக்காக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ஆந்திர, தெலுங்கானா முதல்-மந்திரிகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அவருடையை கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. அடுத்த வேளை உணவு கிடைக்காமல் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் மது தேவையா? என்று அவருக்கு கண்டனமும் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!