பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு கொரோனா

பாலியல் வழக்கில் சிறையிலிருக்கும் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக மீ டூவில் புகார் கூறப்பட்டது. ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ராஸ் மெக்கோவன், அன்னபெல்லா, ஜேன் டோ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் கூறினார்கள்.

2006-ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திரைப்பட தயாரிப்பு பெண் நிர்வாகி மிமி ஹலேயியும், 2013-ல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நடிகை ஒருவரும் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹார்வி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

தற்போது ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2 வாரமாக நியூயார்க் சிறையில் இருக்கும் ஹார்வி வெயின்ஸ்டீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!