இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் – விக்னேஷ் சிவன் டுவிட்

இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் என டுவிட் செய்துள்ளார்.

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘அந்தக் கண்ண பாத்தாக்கா’ பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இதேபோல் குவிட் பண்ணுடா எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், முதன்முறையாக விஜய் படத்திற்கு பாடல் எழுதிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: “விஜய் சாருக்காக நான் எழுதிய முதல் பாடல் இது. இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன். அனிருத், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் ஆகியோரால் இது சாத்தியமானது. இந்த பாடலை உலகமெங்கும் இருக்கும் தளபதி விஜய்யின் அற்புதமான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!