சத்யா – சினிமா விமர்சனம்


சிபிராஜ், ரம்யா நம்பீசன் காதலித்து வருகின்றனர். இவர்களது காதலுக்கு ரம்யா நம்பீசனின் அப்பாவான நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து ரம்யா நம்பீசனுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்கிறது.

இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் சிபிராஜ், அங்கு இருக்க பிடிக்காமல் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். சிபிராஜ் உடன் யோகி பாபுவும் பணியாற்றி வெளிநாட்டிற்கு செல்கின்றார். சில வருடங்களுக்கு பிறகு சிபிராஜுக்கு போன் செய்யும் ரம்யா நம்பீசன், தனது குழந்தை காணாமல் போய்விட்டதாகவும், சிபிராஜ் வந்து கண்டுபிடித்து தரும்படியும் கேட்கிறார்.

இதையடுத்து மீண்டும் சென்னை வரும் சிபிராஜ், ரம்யா நம்பீசனின் குழந்தை என்ன ஆனது என தேட ஆரம்பிக்கிறார். அப்போது அப்படி ஒரு குழந்தையே கிடையாது என ரம்யா நம்பீசனின் கணவர் கூறுகிறார். சமீபத்தில் நடந்த விபத்தில் ரம்யா நம்பீசன் கோமா நிலைக்கு சென்றதாகவும், கண்முழித்த பிறகு தனத குழந்தை எங்கே என்று கேட்பதாகவும் ரம்யாவின் கணவன் கூறுகிறார். கற்பனையில் குழந்தை இருப்பதாக அவள் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தனக்கு குழந்தை இருப்பது உண்மை என ரம்யா திட்டவட்டமாக கூறுகிறாள்.


கடைசியில், என்ன நடந்தது? சிபிராஜ் யார் சொன்னதை நம்பினார்? ரம்யா மீது நம்பிக்கை வைத்து குழந்தையை தேடினாரா? உண்மையிலேயே குழந்தை கிடைத்ததா? அல்லது ரம்யாவின் கற்பனை தானா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்தை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

வழக்கம் போல சிபிராஜ் தனது அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். காதல், சண்டை, உண்மை எது என புரியாமல் நடித்திருக்கும் காட்சிகளில் இயல்பாகவே நடித்திருக்கிறார். நாய்கள் ஜாக்கிரதை படத்திற்கு பிறகு சிபிராஜுக்கு நல்ல ஏற்றத்தை கொடுக்கும் படமாக சத்யா படம் இருக்கும். குறிப்பாக ரம்யா நம்பீசனுடனான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

ரம்யா நம்பீசன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார். சிபிராஜின் காதலியாகவும், குழந்தையை இழந்த ஒரு தாயாகவும் ரம்யா நம்பீசன் நடிப்பு கவரும்படியாக இருக்கிறது.


போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதேபோல் ஆனந்த்ராஜின் கதாபாத்திரம் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. யோகி பாபு தனது பங்குக்கு காமெடியில் சிரிக்க வைக்கிறார். சதீஷ் இந்த படத்தில் மாறுபட்டு காமெடி இல்லாமல், பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாகவே வேலை வாங்கி இருக்கிறார். தெலுங்கில் ஷனம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படத்தின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. திரைக்கதையில் இருக்கும் ட்விஸ்ட் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

சிமோன் கே.எஸ் இசையில் பாடல்கள் ரசித்து கேட்கும்படியாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண்மணி பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `சத்யா’ த்ரில்லானவன்.- Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!