நான் அவளை சந்தித்தபோது – விமர்சனம்

நடிகர் சந்தோஷ் பிரதாப்
நடிகை சாந்தினி தமிழரசன்
இயக்குனர் எல் ஜி ரவிச்சந்தர்
இசை ஹித்தேஷ் முருகவேல்
ஓளிப்பதிவு ஆர்.எஸ்.செல்வா

நாயகன் சந்தோஷ் பிரதாப் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறார். வீட்டில் அப்பா, அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு சென்னை வரும் சாந்தினி, உறவினர் வீட்டின் முகவரியை தொலைத்துவிட்டு தவித்துக்கொண்டு இருக்கிறார். சாந்தினியின் நிலையை பார்த்து பரிதாபப்படும் சந்தோஷ் அவரை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டுபோய் விடுகிறார்.

ஆனால் ஊர் பஞ்சாயத்தில் சந்தோஷை தவறாக நினைத்து சாந்தினியை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். சாந்தினியுடன் ஒரு இரவு இருந்துவிட்டு சென்னைக்கு திரும்பி விடுகிறார். ஆனால் சாந்தினியின் நினைவு வாட்டுவதால் அவரை திரும்ப ஏற்றுக்கொள்கிறார். சந்தோஷின் வீட்டில் சாந்தினியை ஏற்றுக்கொண்டார்களா? சந்தோஷ் சினிமாவில் ஜெயித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.

தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர். சந்தோஷும் சாந்தினியும் அந்த கதைக்கு உயிர் கொடுத்துள்ளார்கள். சினிமாவில் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை போராட்டத்தை சந்தோஷ் திரையில் இயல்பாக பிரதிபலித்துள்ளார். முதலில் சாந்தினியை ஒதுக்கும் அவர் பின்னர் அவரது அன்பை புரிந்து ஏற்றுக்கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.

எதிர்பாராமல் கிடைத்த வாழ்க்கையாக இருந்தாலும் அது நம்மைவிட்டு போய்விடுமோ என்ற போராட்டத்தை சாந்தினி தனது நடிப்பால் கொண்டு வந்துள்ளார். சந்தோஷின் நண்பர்களாக வரும் சாம்ஸ், கோவிந்தமூர்த்தி, சாந்தினியின் பெற்றோரான ஜிஎம்.குமார், சுஜாதா உள்ளிட்ட மற்ற அனைவருமே தங்கள் சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள்.

இயக்குனர் எல்.ஜி.ரவிச்சந்தர் எளிய கதையை எடுத்து அதற்கு உணர்வுபூர்வமான திரைக்கதை அமைத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக கொடுத்து இருக்கிறார். படத்தின் இறுதியில் நிஜ நபர்களை கதாபாத்திரங்களுடன் பொருத்தி காண்பிப்பது சுவாரசியம்.

ஹித்தேஷ் முருகவேலின் இசையும் ஆர்.எஸ்.செல்வாவின் ஒளிப்பதிவும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன.

மொத்தத்தில் ’நான் அவளை சந்தித்தபோது’ உணர்வுப்பூர்வமானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!