அம்மா உயிருடன் இருந்தபோது பாட்டியிடம் சொல்லியிருக்காங்க, என்னிடம் சொல்லல: வாரிசு நடிகை

தான் நடிகையானதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் கல்பனாவின் மகள் ஸ்ரீமயி.

நடிகையான ஸ்ரீமயி
நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனாவின் ஒரே மகள் ஸ்ரீமயி கிஸ்ஸா என்கிற மலையாள படம் மூலம் நடிகையாகியுள்ளார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் ஸ்ரீமயிக்கு படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். சினிமாவை பார்த்து வளர்ந்த தனக்கு நடிகையாகியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீமயி.

கூச்ச சுபாவம்
திரையுலகம் எனக்கு சொந்த வீடு போன்றது. என் தாத்தா, பாட்டி, அம்மா, சித்தி, பெரியம்மா ஆகியோர் திரையுலகை சேர்ந்தவர்கள். இருப்பினும் நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை. எனக்கு திரையுலகம் பிடிக்கும் என்றாலும் நான் கூச்ச சுபாவம் உள்ளவள். அதனால் பள்ளியில் படித்தபோது மாறுவேட போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள அம்மா தான் உதவி செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீமயி.

கல்பனா அம்மா
எப்பொழுது பார்த்தாலும் வெட்கப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது என்பதை பின்னர் உணர்ந்தேன். வேலை விஷயத்தில் தான் நம்பிக்கையுடன் செயல்படுவேன். எனக்கு உன்னை நன்கு தெரியும். நீ சினிமாவுக்கு வரலாம் என்று அம்மா ஒருமுறை கூறினார். ஆனால் அது தொடர்பாக அவர் என்னை கட்டாயப்படுத்தவில்லை. என்னை ஒரு நாள் நடிகையாக பார்க்க ஆசையாக உள்ளதாக அம்மா என் பாட்டியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இதை அவர் என்னிடம் நேரடியாக கூறவில்லை என்கிறார் ஸ்ரீமயி.

ஸ்ரீமயி நம்பிக்கை
நானும், அம்மாவும் தோழிகள் போன்றவர்கள். பாட்டி தான் தற்போது எனக்கு அறிவுரை வழங்கி வருகிறார். சினிமாவில் வெற்றி பெறுவது எளிது அல்ல. கடினமாக உழைக்க வேண்டும். உழைப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கிறார். திரைத்துறையில் இருப்பது அலுவலக வேலை போன்று இல்லை. பண்டிகை காலங்களில் எல்லாம் வேலை செய்ய வேண்டும். நான் அர்ப்பணிப்புடன் இருந்தால் வெற்றி எனதே என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஸ்ரீமயி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!