ஆர்யா திருமணத்துக்கு வராதது ஏன்? – பூஜா விளக்கம்

நடிகர் ஆர்யாவுடன் நான்கு படங்களில் நடித்த பூஜா, அவரது திருமணத்திற்கு வராதது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து பின் தன் அப்பாவுடன் இந்தியா வந்து படிக்கும் போது சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூஜா. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஜீவா இயக்கத்தில் உருவான ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் முதல்முறையாக நடித்தார். அந்த படம் தாமதமாக ரிலீஸானதால் அதற்கு முன்பே சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜே ஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி விட்டார்.

அதன்பிறகு ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, பந்தய கோழி, ஓரம் போ, நான் கடவுள், துரோகி, விடியும் முன் ஆகிய படங்களில் பூஜா நடித்தார்.

இதற்கு பிறகு தமிழில் நடிக்காத பூஜா தனது சொந்த நாடான இலங்கைக்கே திரும்பி சென்று அங்கு சிங்கள படங்களில் நடித்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் தொழிலதிபருடன் திருமணம் நடைப்பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை வந்த பூஜா பேட்டியளித்தார்.

அதில் பல சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ‘பூஜா’, தமிழில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என்றும் பிடித்த நடிகை ‘கீர்த்தி சுரேஷ்’ என்றும் கூறினார். மேலும் தான் ஆஸ்திரேலியாவில் இருந்ததால் தான் தனது நண்பரான ஆர்யா கல்யாணத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

ஆர்யா மற்றும் பூஜா இணைந்து 4 படங்களில் நடித்துள்ளனர். அவை உள்ளம் கேட்குமே, பட்டியல், ஓரம் போ மற்றும் நான் கடவுள் ஆகும். இதில் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி அடைந்தவை. மீண்டும் பூஜா தமிழில் நடிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!