சொன்னால் சொன்னது தான், சமரசமே கிடையாது: கமல் ஹாசன் கறார்

கமல்ஹாசன் தன் பிறந்தநாளையொட்டி பேனர்கள்‌ வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கமல்ஹாசன் நாளை தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த முறை கமல் பிறந்தநாள் மட்டுமில்லாமல் அவர் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடுகிறார்கள். அதனால் அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கமல் நாளை தமது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சியின்‌ நிர்வாகிகள்‌, உறுப்பினர்கள்‌ மற்றும்‌ பலர் கலந்து கொள்கின்றனர். அப்போது தனக்கு அங்கே பேனர்கள்‌, ஃபிளெக்ஸ்‌ மற்றும் கொடிகள் வைக்க வேண்டாம் என்று கமல் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘நவம்பர் 7ஆம் தேதி எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌.

அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப் பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொது மக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றைக் கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்‌.

இனி நிகழவிருக்கும்‌ அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி முறைகளில்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கொண்டு வரவிருக்கும்‌ மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்‌ என்பது எனது விருப்பம்‌’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!