நான் பிரதமருக்கு எதிராக பேசவும் இல்லை, குறை சொல்லவும் இல்லை: எஸ்.பி.பி.

தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 29ம் தேதி டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

பிரதமர் வீட்டு நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர்கள் தனது செல்போனை வாங்கிக் கொண்டதாகவும், ஆனால் பாலிவுட் பிரபலங்கள் மட்டும் எப்படி மோடியுடன் செல்ஃபி எடுத்தார்கள் என்று எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்தவர்கள் மோடி அப்படித் தான் செய்வார் என்று தெரிவித்தனர். சிலரோ, பிரதமர் அளித்த விருந்தில் கலந்து கொண்டு அவரையே குறை சொல்வதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி. கூறியிருப்பதாவது,

இது ஏன் சர்ச்சையாகியுள்ளது?. என் செல்போனை பறித்துக் கொண்டார்கள், நான் பிரதமர் மீது அதிருப்தி அடைந்தேன் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்…நான் பிரதமருக்கு எதிராக எதுவும் கூறவில்லை.

ஸ்டார்களுக்கு எதிராகவும் நான் பேசவில்லை. எங்களை செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை, ஆனால் சிலர் செல்ஃபி எடுத்தார்கள். அது போன்று எங்களால் எடுக்க முடியவில்லை. அவ்வளவு தான்.

நான் ஒரு சாதாரண ஆள். அன்று நடந்ததை தெரிவித்தேன். அது புகார் இல்லை. மற்றவர்களுக்கு அளித்த அதே மரியாதையை எனக்கும் அளித்தார்கள். சிலர் செல்ஃபி எடுத்தபோது எங்களை மட்டும் ஏன் செல்போனை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று தான் கேட்டேன் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!