விஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்

கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள் இருக்கும். இதுவே இவரது வெற்றியின் ரகசியம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டான். மருத்துவர்கள் நீண்ட நாட்களாக சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஒருநாள் ஒருவருடைய செல்போனில் செல்பி புள்ள என்ற பாடல் ரிங்டோனாக ஒலித்திருக்கிறது.

இந்த ரிங்டோனை கேட்டதும், சிறுவனின் உடலில் சிறிது அசைவுகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், தொடர்ந்து விஜய்யின் பஞ்ச் வசனங்கள், நடனம், பாடல்கள் ஆகியவற்றை காட்டி வந்துள்ளனர். தற்போது வெளியாகி இருக்கும் பிகில் படத்தின் பாடல்களை கேட்டு சிறுவன் நடக்க ஆரம்பித்திருக்கிறான்.

தற்போது மெதுவாக குணமடைந்து வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தன் மகன், விஜய் படங்கள் மூலம் குணமடைந்திருப்பது, மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!