5 மொழிகளில் உருவாகும் விஜய்சேதுபதி படத்தின் தலைப்பு அறிவிப்பு

விஜய்சேதுபதி நடிப்பில் 5 மொழிகளில் உருவாக உள்ள படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இதனால் பிற மொழி படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் மார்கோனி மாதாய் படத்தில் நடித்தார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி எனும் வரலாற்று படத்தில் நடித்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகில் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். அடுத்ததாக சுகுமார் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘புஷ்பா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாக உள்ளது. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், விஜய் சேதுபதி வனத்துறை அதிகாரி வேடத்திலும் நடிக்க உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!