குண்டம்மா என்று சொன்னதற்காக விஜய் மன்னிப்பு கேட்டார்: ரோபோ சங்கர் மகள்!

குண்டம்மா என்று கூறியதற்காக விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார் என்று நடிகை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தெரிவித்துள்ளார்.

விஜய் – ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்த படம் பிகில். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி, ஆதிரை சௌந்தரராஜன் ஆகியோர் உள்பட பலர் விளையாட்டு வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.

படத்தின் கிளைமேக்ஸின் போது இந்திரஜாவை பார்த்து இவ்வளவு பெரிய உடம்ப வச்சிக்கிட்டு உன்னால் ஓட முடியல என்றும், கோல் போட முடியவில்லை என்றும் கால்பந்து பயிற்சியாளராக வரும் விஜய், குண்டம்மா, குண்டம்மா என்று கூறியுள்ளார். இதற்கு குண்டம்மா என்று கூற வேண்டாம் என்று அழுது கொண்டே கூறுவார். ஆனால், டிரைலரில் அப்பாவும் குண்டு, அம்மாவும் குண்டு, நானும் அப்படித்தானே இருப்பேன் என்று இந்திரஜா கூறுவார்.

இந்த நிலையில், விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக இந்திரஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், முதலில் என்னை குண்டம்மா என்று கூறுவதற்கு விஜய் தயங்கினார். ஆனால், படத்தின் காட்சிக்கு அப்படிப்பட்ட ஒரு டயலாக் தேவைப்பட்டதால், அப்படி நடித்தார்.

நானும், எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. எனினும், அப்படிப்பட்ட காட்சியில் நடித்து முடித்த பிறகு என்னிடம் வந்து குண்டம்மா என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய், தளபதி 64 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் முடிக்கப்பட்ட நிலையில், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள எஸ்.ஆர்.சி.சி கல்லூரியில் நேற்று தொடங்கியுள்ளது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்த பின்னர் மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!