ஜீவாவின் ஜிப்ஸி படத்துக்கு தடை நீங்கியது

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்துக்கு தடை நீங்கியதால் விரைவில் திரைக்கு வர உள்ளது.

குக்கூ, ஜோக்கர் படங்களை எடுத்து பிரபலமான ராஜூ முருகன் இயக்கிய ‘ஜிப்ஸி’ படத்தில் ஜீவா நடித்துள்ளார். நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன்பே முடித்து தணிக்கைக்கு அனுப்பினர்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்துக்கள் மத உணர்வை புண்படுத்தும் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்து சான்றிதழ் அளிக்க மறுத்து விட்டனர். உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கேலி செய்வது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. மறு தணிக்கையிலும் அனுமதி மறுத்தனர். தணிக்கை குழுவினர் சில காட்சிகளை நீக்கும்படி கூறியதை ராஜூ முருகன் ஏற்கவில்லை.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஜிப்ஸி திரைப்படத்தில் என்ன பிரச்சினை. இரு முறை தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டு டிரிபியூனல் செல்ல அறிவுறுத்தப்பட்டதா? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும் முதல்வர் யோகி கெட்டப் போட்டு அவர் பெயரை பயன்படுத்தியதும், இந்து கலவர காட்சிகளும் காரணமா? தயாரிப்பாளர் தி.மு.க.வா? என்று பதிவிட்டார்.

இதைத்தொடர்ந்து நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கு ஜிப்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சில சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!