எம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை மரணம்

எம்.ஜி.ஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

தமிழில் எம்.ஜி.ஆரின் ஆசை முகம், அன்னமிட்ட கை, தாயின் மடியில், பணம் படைத்தவன், என் எண்ணன், சிவாஜியின் நெஞ்சிருக்கும் வரை, ஜெமினிகணேசனின் கங்கா கவுரி உள்பட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதற்காக ஐதராபாத் பிலிம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். இவர் தமிழ் மொழி தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மறைந்த கீதாஞ்சலியின் கணவர் ராமகிருஷ்ணாவும் பிரபல நடிகர் ஆவார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.

மறைந்த கீதாஞ்சலிக்கு அதித் ஸ்ரீனிவாஸ் என்ற மகன் உள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த கீதாஞ்சலி, மறைந்த என்.டி.ராமாராவ் இயக்கி, நடித்த ‛சீதாராம கல்யாணம்’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தெலுங்கில் என்டிஆர்., நாகேஸ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த இவர், மலையாளம், இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக ‛பாரிஸ் பாரிஸ்’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான தமன்னா நடித்துள்ள ‛தெட் இஸ் மகாலட்சுமி’ படத்தில் நடித்தார். கடைசியாக தமிழில் கங்கா கவுரி படத்தில் நடித்தார். கீதாஞ்சலியின் மறைவு தெலுங்கு சினிமா திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!