அசுரன் கட் அவுட்டுக்கு பதில் தையல் மிஷின் கொடுத்து அசத்திய தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் ரசிகர்கள் கட் அவுட் வைப்பதற்குப் பதிலாகத் திருநங்கைகளுக்குத் தையல் மிஷின் கொடுத்து அசத்தியுள்ளனர்.

சமீபத்தில் சட்ட விரோதமாக வைத்த அரசியல் கட்சி பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். அதைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் தொண்டர்களிடம் தங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என கூறினார். அதே போல் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரும் ரசிகர்களிடம் பேனர் வைக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் இன்று தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘அசுரன்’ படம் இன்று வெளியாகி உள்ளது. இதையொட்டி தனுஷ் ரசிகர்கள் வழக்கம் போல் பேனர், கட் அவுட் வைக்காமல் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஆம்… பேனருக்கு பதில் நெல்லை தனுஷ் ரசிகர்கள் சிலர் இணைந்து , திருநங்கைகளுக்குத் தையல் இயந்திரம் வழங்கி அசத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பங்கேற்று திருநங்கைகளுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளார். தனுஷ் ரசிகர்களின் இந்த செயல் பொது மக்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் ‘காப்பான்’ வெளியான போது இதே நெல்லையில் உள்ள சூர்யா ரசிகர்கள் ரசிகர்களுக்கு ஹெல் மெட்டுக்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போன்று நல்ல விஷயத்தை விஜய், அஜித், ரஜினி ரசிகர்களும் செய்தால் நன்றாக இருக்கும் என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இதில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!