சிம்பு, தனுஷ் பட நாயகி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!!!


தனுசுடன் ‘மயக்கம் என்ன’, சிம்புவுடன் ‘ஒஸ்தி’ படங்களில் நாயகியாக நடித்தவர் ரிச்சா கங்கோ பாத்யாயா.

பின்னர் தெலுங்கில் பிரபாஸ், ரவிதேஜா, நாகார்ஜுனா படங்களில் நடித்தார். தமிழில் ரிச்சா நடித்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதற்கிடையே 4 வருடங்களுக்கு முன்பு எம்.பி.ஏ படிப்பதற்காக ரிச்சா அமெரிக்கா சென்றார். ரசிகர்கள் டுவிட்டரில் அவரை மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள்? என்று அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தார்கள். தற்போது படிப்பை முடித்துவிட்டார். ஆனால் ரசிகர்களின் கேள்விக்கு, ‘இனி நிச்சயம் நடிக்க வரமாட்டேன்’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


‘திரைப்படத்தில் இருந்து வெளியே வந்து 5 வருடங்கள் ஆனபிறகும், என்னுடைய அடுத்த படம் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான் பதில்…. நான் வாழ்க்கையின் புதிய பகுதியில் இருக்கிறேன். நடிப்பதற்கு லட்சியம் எதுவும் இல்லை. நான் நடிக்க வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்.

நடிப்பைவிட்டால் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேனா? என்று பலர் கேட்பது வெறுப்பூட்டுகிறது. திருமணம் தவிர வேறு லட்சியங்கள் இருக்கக்கூடாதா?’ என்று கூறியுள்ளார். இதற்கு பிறகும் நடிக்க வருவீர்களா? என்று கேட்ட ரசிகர்களுக்கு முன்னாள் இந்திய திரைப்பட நடிகை என்று தனது பெயரை டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!