நயன்தாராவின் “அறம்” ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும்!!!


கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் `அறம்’ படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `அறம்’.

கோபி நைனார் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி அலசி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்துள்ளார். விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போன `அறம்’ படம் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.


‘விக்ரம் வேதா’ படத்தை வெளியிட்ட `டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ‘அறம்’ படத்தை வெளியிடுகிறது. இது குறித்து `டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் அவர்கள் பேசுகையில், ”இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக ‘அறம்’ இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். ‘அறம்’ படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை” என்று கூறினார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவு அதிகரித்துள்ளது.

`டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ சார்பில் சித்தார்த் – ஆண்ட்ரியா நடித்துள்ள `அவள்’ வருகிற நவம்பர் 3-ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!